search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிபா வைரஸ் காய்ச்சல்"

    நிபா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு காரணமாக கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் வருகிற 1-ந்தேதிக்கு பதில் ஜூன் 5-ந்தேதி பள்ளிகளை திறக்கும்படி கேரள பள்ளி கல்வித்துறை அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோழிக்கோடு, மலப்புரம் உள்பட சில மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவி உள்ளது. இதன் காரணமாக இதுவரை 14 பேர் உயிரிழந்து உள்ளனர்.

    மேலும் நிபா வைரஸ் காய்ச்சல் காரணமாக அந்த மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கோழிக்கோடு, மலப்புரம் அரசு ஆஸ்பத்திரிகளில் தனி வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு சிறப்பு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்த நிபா வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு எளிதாக பரவும் தன்மை கொண்டதாக இருப்பதால் பொதுமக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்சுகளும் முக கவசம் மற்றும் விஷேச பாதுகாப்பு ஆடை அணிந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.


    இந்த நிலையில் கோடை விடுமுறை முடிந்து வருகிற 1-ந்தேதி கேரளாவில் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட உள்ளது. ஆனால் மலப்புரம், கோழிக்கோடு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் நிபா வைரஸ் காய்ச்சல் பீதி காரணமாக அந்த மாவட்டங்களை காலி செய்துவிட்டு வெளியூர்களில் உள்ள உறவினர்கள் வீடுகளுக்கு சென்றுவிட்டனர்.

    இதனால் கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் வருகிற 1-ந்தேதிக்கு பதில் ஜூன் 5-ந்தேதி பள்ளிகளை திறக்கும்படி கேரள பள்ளி கல்வித்துறை அதிகாரி உத்தரவிட்டுள்ளார். மற்ற மாவட்டங்களில் வருகிற 1-ந்தேதி பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #Nipahvirus
    கேரளாவில் 6 பேருக்கு நிபா வைரஸ் காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரிய வந்துள்ளதையடுத்து, அவர்கள் கோழிக்கோடு சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். #nipahvirus
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒருவித வைரஸ் காய்ச்சல் பரவியது.

    காய்ச்சல் பாதித்தவர்களின் ரத்த மாதிரிகளை சோதனை செய்தபோது அவை நிபா வைரஸ் என தெரியவந்தது. இந்நோய் வேகமாக பரவும் தன்மை கொண்டதோடு, போதுமான தடுப்பு மருந்துகள் கண்டு பிடிக்கப்படவில்லை எனவும் கூறப்பட்டது.

    இதையடுத்து டெல்லியில் இருந்து மத்திய குழு மற்றும் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி டாக்டர்கள் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் வந்து ஆய்வு நடத்தினர்.

    மத்திய குழு நோய் பாதித்தவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து நிபா வைரஸ் காய்ச்சல் பாதித்தவர்களுக்கு தனி வார்டுகள் அமைத்து அவர்களுக்கு சிறப்பு சிகிச்சைகளும் அளிக்கப்பட்டன.

    இருந்தும் கோழிக்கோடு ஆஸ்பத்திரியில் நிபா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த நர்சு லினி, நோயாளிகளை ஏற்றி சென்ற ஆட்டோ டிரைவர் அபின்(வயது 26) உள்பட 14 பேர் பலியானார்கள்.

    இவர்களை தவிர கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் மட்டும் 908 பேர் சிகிச்சைக்கு வந்தனர். அவர்களின் ரத்த மாதிரிகள் பூனா மற்றும் மணிப்பூரில் உள்ள நோய் ஆய்வு மைய பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதில் 6 பேருக்கு நோய் அறிகுறி இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே அவர்கள் கோழிக்கோடு மருத்துவக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    கோழிக்கோடு மாவட்டத்திற்கு கேரள சுகாதாரத்துறை மந்திரி சைலஜா மற்றும் டாக்டர்கள் குழுவினர் நேற்றும் சென்று ஆய்வு நடத்தினர். நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தனர்.

    இதுபற்றி மந்திரி சைலஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

    கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் நோய் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரமாக நடந்து வருகிறது. மீண்டும் ஒரு முறை இது போன்ற நோய் பரவாமல் இருக்க என்னசெய்ய வேண்டும்? என்பது பற்றி சுகாதாரத்துறையுடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இதற்காக மாநில அரசின் சுகாதாரத்துறை மூலம் நிபா வைரஸ் குறித்து ஆய்வு நடத்தி தடுப்பு மருந்துகள் கண்டு பிடிக்கவும் ஏற்பாடு செய்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #nipahvirus

    நிபா வைரஸ் காய்ச்சல் குறித்து பொது மக்கள் பீதியடைய வேண்டாம் என மாவட்ட கலெக்டர் வினய் தெரிவித்து உள்ளார்.
    திண்டுக்கல்:

    நிபா வைரஸ் கிருமியால் நிபா காய்ச்சல் எனும் தொற்றுநோய் பரவுகிறது. நோய் பாதிக்கப்பட்ட நபர் இருமும்போது தும்மும்போது உமிழ்நீரில் கிருமிகள் வெளிப்படுகின்றன. இக்கிருமிகள் நம்மை அறியாமல் நம் உடலில் ஊடுருவி தாக்க ஆரம்பிக்கிறது

    வவ்வால் கடித்த பழங்கள், பாதி உண்ட பழங்கள், பன்றி மற்றும் வெளவாலுடன் தொடர்புடையவர்களிடமிருந்து நோய் பரவுகிறது. தற்போது கேரளாவில் நிபா வைரஸ் பரவி உள்ளது.

    நிபா வைரஸ் தாக்கினால் மூக்கில் நீர்ச்சளி ஒழுகுதல், தலைவலி, காய்ச்சல், இருமல், மூச்சு திணறல், கழுத்து பிடிப்பு, தசைவலி, ஞாபகம் மறத்தல், மயக்கமடைதல், வலிப்பு, கோமா பிறகு மரணம் ஏற்பட வாய்ப்புள்ளது. நோய் ஏற்படின் அறிகுறிகளுக்கேற்ப உடனடியாக மருத்துவ சிகிச்சை செய்து கொள்ள வேண்டும்.

    மேலும் இந்நோய் பாதிப்பிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள கைகளை சுத்தமாக கழுவுதல், கைகளை மூக்கு, வாய் பகுதிக்கு அடிக்கடி கொண்டு போகாமல் இருத்தல். இருமல் வந்தால் பாதுகாப்பாக கைகுட்டை பயன்படுத்துதல், மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பயணத்தை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

    எனவே, பொதுமக்கள் பழங்களை கழுவிய பிறகு பயன்படுத்தவும், வவ்வால், பறவைகள் கடித்த பழங்களை பயன்படுத்தாமலும், இப்பழங்களை வீட்டில் வளர்க்கும் பிராணிகளுக்கு கொடுக்காமலும் இருக்க வேண்டும். பன்றி வளர்ப்போர் பண்ணைகளை சுத்தமாகவும், தினந்தோறும் கிருமிநாசினி கொண்டு பண்ணையை சுத்தப்படுத்த வேண்டும்.

    மேலும், பன்றிகளை ஊராட்சியிடம் உரிமம் பெற்று பன்றிகளை அவர்கள் அளிக்கும் நிபந்தனைகளின்படி பொதுமக்கள் வசிக்காத இடங்களில் வளர்க்க வேண்டும்.

    பொது மக்களுக்கு தொல்லைதரும் விதமாக பன்றிகளை நடமாட விடுவது, பொது இடங்களில் அலையவிடுவது, அசுத்தம் செய்வது, வீடுகளில் புகுந்து பொதுமக்களுக்கு தொல்லை ஏற்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடும் பன்றி வளர்க்கும் நபர்களின் மீது சட்டப்படி கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். பன்றிகள் நோய் வாய்ப்பட்டாலோ, இறந்தாலோ உடனடியாக கால்நடைத்துறை மற்றும் சுகாதாரத்துறைக்கு தெரியப்படுத்த வேண்டும்.

    பல்வேறு துறைகளின் கூட்டு முயற்சியுடன் நிபா வைரஸ் தமிழகத்தில் பரவாமல் தடுக்கப்படும். பொது மக்கள் இத்தொற்று நோய் குறித்து பீதியடைய வேண்டாம் என மாவட்ட கலெக்டர் வினய் தெரிவித்து உள்ளார்.
    ×